உலக செய்திகள்

12 வயது சிறுமியை கடத்தி 45 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி; பாகிஸ்தானில் அவலம்

பாகிஸ்தானில் 12 வயது சிறுமியை கடத்தி 45 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பைசலாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் 12 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று 45 வயது நபர் ஒருவருக்கு திருமணம் முடிக்க முயன்றுள்ளது.

அந்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர். 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி தப்பியோடி விட்டார். சிறுமியின் வயது 17 என தவறாக காட்டப்பட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளி மீது நடவடிக்கை கோரி உயரதிகாரிகளிடம் முறையிட்ட சிறுமியின் தந்தை, காவல் துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

அந்நாட்டில் இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த நவம்பரில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வரும் அலி அசார் (வயது 44) என்பவர், அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார்.

இதற்காக மதரசா ஜமியா இஸ்லாமியாவில் மதமாற்ற சான்றிதழும், அர்ஜூ பாத்திமா என்ற புதிய பெயருடன் திருமண சான்றிதழும் கொண்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வைத்து தனது தாய் ரீட்டாவை சிறுமி சந்திக்க விடாமல் அலி அசார் தடுத்து விட்டார்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானின் ஹசன் அப்துல் சிட்டியில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவரான பிரீத்தம் சிங் என்பவரது மகள் புல்பால் கவுர் (வயது 17) திடீரென காணாமல் போனார்.

இதுபற்றி டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியிடம் பிரீத்தம் புகார் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் அந்த அமைப்பு தெரிவித்தது. இந்த நிலையில், சீக்கிய கமிட்டியானது, அந்த இளம்பெண் கடத்தப்பட்டு உள்ளார் என்றும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு அவர் மதமாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

பாகிஸ்தானில் சிறுமிகளை கடத்தி திருமணம் செய்வது, மதமாற்றத்தில் ஈடுபடுத்துவது போன்ற அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது