உலக செய்திகள்

இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை: வங்காளதேச சிறப்பு கோர்ட்டில் விசாரணை தொடங்கியது

இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வங்காளதேச சிறப்பு கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

தினத்தந்தி

டாக்கா,

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டலுக்குள் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 5 பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தரிஷி ஜெயின் (வயது 19) என்கிற பெண் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 17 பேரும், பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் உள்பட வங்காள தேசத்தை சேர்ந்த 5 பேரும் பலியாகினர்.

அதே சமயம் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். வங்காள தேசத்தில் நடந்த இந்த தாக்குதல் உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இதற்கிடையே உயிர் இழந்த 5 பயங்கரவாதிகள் தவிர மேலும் 17 பேருக்கு ஓட்டல் தாக்குதலில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களில் 9 பேர் ராணுவம் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் உயிர் இழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர். இதையடுத்து ஓட்டல் தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சிறப்பு தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தனது விசாரணையை தொடங்கியது. முதல் நாள் விசாரணையின்போது போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்றும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது.

முன்னதாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 6 பேர் சார்பில் ஆஜராக 5 வக்கீல்களை சிறப்பு தீர்ப்பாயம் நியமித்ததும், ஆனால் வக்கீல்கள் அனைவரும் அதனை ஏற்க மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு