கோப்புப்படம்  
உலக செய்திகள்

ஈரான் வீரர் படுகொலை விவகாரம்; மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான் அரசு

போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தெஹ்ரான்

2022-ம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படை வீரர் பலியான சம்பவத்தில் நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி, 22 வயது இளம்பெண் மாஷா அமினி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

துப்பாக்கி சூடு

இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்தன. இந்த போராட்டங்கள் தொடர்பாக 7 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது, சல்மான் அமீராமதி என்ற ஈரானிய பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. ஆரிப் கோஷ்கார் என்ற நபர் வீடு ஒன்றின் மேற்கூரை பகுதியில் இருந்தபடி, வீரரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு துப்பாக்கியை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு தப்பினார்.

மரண தண்டனை

இதனை விசாரணையின்போது அவர் ஒப்புக்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, கோஷ்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT