கொழும்பு,
இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக, பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை இனத்தவராகிய இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மியான்மரில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ள நிலையில், ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைவதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மத்திய கண்டி மாவட்டத்தில் இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.
இதன் காரணமாக, இலங்கையில் மோதல் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், கடந்த 6 ஆம் தேதி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 10 நாட்களுக்கு நெருக்கடி நிலை அமலில் இருக்கும் என்று ஜனாதிபதி சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார். மேலும், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இலங்கையில் தற்காலிகமாக 7 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின் போது பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வெறுப்பூட்டும் கருத்துக்களை நீக்க முயற்சிப்பதாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை அரசு, பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. முன்னதாக, வாட்ஸ் அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்றே விலக்கி கொள்ளப்பட்டது கவனிக்கத்தக்கது.