மாஸ்கோ,
ரஷ்ய ராணுவத்தின் உளவு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செர்கெய் ஸ்கிரிபால். பின்னர் இவர் இங்கிலாந்திற்காக உளவு வேலையில் ஈடுபட்டு ரஷ்யாவால் கைது செய்யப்பட்டார். அதன்பின் உளவாளிகள் பரிமாற்றம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2010ம் ஆண்டு இவர் இங்கிலாந்து நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கெய், சாலிஸ்பரி நகரில் மார்ச் 4ந்தேதி தனது மகள் யூலியாவுடன் இருந்தபொழுது அடையாளம் தெரியாத விஷபொருள் ஒன்றை இருவரும் முகர்ந்துள்ளனர். இதில் மயக்கமடைந்து அவர்கள் சரிந்து உள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செர்கெய் விவகாரத்திற்கு பின்னால் ரஷ்யா உள்ளது என்று இங்கிலாந்து குற்றம் சாட்டியது. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்தது. எனினும், ரஷ்ய தூதர்கள் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு ஆதரவாக பேசிய அமெரிக்காவும் தனது நாட்டில் உள்ள ரஷ்ய தூதர்களை உளவாளிகள் என கூறி வெளியேற்றியது. இதுபோன்று பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் வெளியுறவு துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, பிரெக்சிட் விசயத்தில் தனது வாக்காளர்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற இங்கிலாந்து தவறி விட்டது. இதுபோன்ற அசவுகரிய சூழ்நிலையில் இருந்து கவனத்தினை திசை திருப்புவதற்கு இங்கிலாந்து அரசு உளவாளிக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தினை பயன்படுத்தி கொண்டுள்ளது என கூறியுள்ளார்.