லண்டன்,
லண்டனில் நடந்த லீமான்ஸ் கப் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.
முதல்-அமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் பிரிட்டனில் நேற்று இரவு 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் 'லீ மேன்ஸ்' அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில், அஜித்தின் அழைப்பின் பேரில் முதல்-அமைச்சர் விஜய் அங்கு சென்றார்.
கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய் அங்கு அஜித் குமாரை ஓடிச் சென்று ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயம் நிறைவு பெற்றது. லண்டனில் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் கார் பந்தய போட்டி தொடங்கி இரவு 11.47 மணிக்கு நிறைவடைந்தது. 5.1 கி.மீ பந்தயத்தூரம் (50 லேப்கள்) கொண்ட இந்த போட்டியில் ஏ.என்.எஸ். மோட்டார்ஸ்போர்ட் அணி முதலிடம் பிடித்தது.
ஆர். ஏஸ்.ஜி.பி அணி 2-வது இடம் பிடித்து அசத்தியது. டீம் விராஜ் சார்பில் களம் இறங்கிய அஜித் அணி 3-வது இடம் பிடித்தது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் 16 இடத்தில் இருந்த அஜித் அணி படிப்படியாக முன்னேறி 3-ம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பந்தயம் தொடங்கியதும் நடிகர் அஜித் கார் சீராக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அஜித்தின் கார் விபத்திற்குள்ளாகியது. கார், டிராக்கில் இருந்து திடீரென விலகி பக்கவாட்டில் சென்றது. உடனடியாக மீட்பு குழுவினர் பணியில் இறங்கி காரை சீரமைத்தனர். பந்தயத்தில் 44 கார்கள் பங்கேற்றன.