உலக செய்திகள்

மலேசியாவில் கல்லூரி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 15 பேர் பலி - பிரதமர் இரங்கல்

விபத்தில் சிக்கியவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

கோலாலம்பூர்,

மலேசியாவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மலேசியாவின் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ் என்ற தனியார் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரிக்குச் சொந்தமான ஒரு வளாகம் ஜெர்டேவிலும் செயல்படுகிறது. அங்குள்ள மாணவர்கள் சிலர் பேராக்கில் உள்ள பிரதான வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.தாய்லாந்து எல்லையில் உள்ள கெரிக் நெடுஞ்சாலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நிலைதடுமாறி முன்னால் சென்ற கார் மீது பஸ் மோதியது. இதனையடுத்து அந்த பஸ் மற்றும் கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்தில் பலியானோருக்கு அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT