உலக செய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை

அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை பாதுகாப்பு சோதனைச்சாவடி அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார். ஆனால் அவர் சந்தேகநபர் சுட்ட குண்டுகளால் காயமடைந்தாரா அல்லது அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்தாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் மாலை 6 மணியளவில் சந்தேகநபர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதான நசிரே பெஸ்ட் என்பது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் டிரம்ப் இருக்கும் பகுதிகளில், நடைபெறும் மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.