உலக செய்திகள்

அமெரிக்காவில் ‘ரிமோட்’ மூலம் இயங்கிய கார் மோதி வாலிபர் சாவு

அமெரிக்காவில் ‘ரிமோட்’ மூலம் இயங்கிய கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கேல் கோஸ்னோவிச் (வயது 21). இவர் நியூயார்க்கின் குயின்ஸ் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மைக்கேல் தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக குயின்ஸ் நகரில் உள்ள போச் பவுல்வர்டு என்ற இடத்துக்கு சென்றார்.

பொருட்களை வாங்கிய பிறகு அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களுக்கு நடுவே மைக்கேல் நின்று கொண்டிருந்தார். அந்த 2 கார்களில் ஒரு கார் ரிமோட் மூலம் இயங்கும் வசதி கொண்டது. அந்த காரின் உரிமையாளர் தவறுதலாக காரின் ரிமோட்டை அழுத்திவிட்டார். இதில் அந்த கார் முன்னோக்கி நகர்ந்ததால் 2 கார்களுக்கும் இடையில் மைக்கேல் சிக்கிக்கொண்டார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ரிமோட் மூலம் இயங்கிய காரை பின்னோக்கி இழுக்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து முன்னோக்கி சென்ற கார் மைக்கேலை நசுக்கியது. பின்னர் அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

SCROLL FOR NEXT