Image Credits: AI 
உலக செய்திகள்

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர வெளியேற்றம்

500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.

பாரிஸ்,

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ சுமார் 4 ஆயிரத்து 900 ஏக்கர் வனப்பரப்பிற்கு மளமளவென பரவியது. இதையடுத்து, அங்குள்ள 8 சுற்றுலா முகாம்களில் தங்கியிருந்த பயணிகள் மற்றும் காடுகளின் ஓரமாக வசித்த பொது மக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். எனினும், கடுமையான வறட்சி மற்றும் வெயில் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நீடிக்கிறது. காலநிலை மாற்றத்தால் நடப்பாண்டில் மட்டும் பிரான்சில் 44 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.