பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க அமலாக்கப்பிரிவு சர்வதேச போலீசான இன்டர்போலை நாடியது. இதனையடுத்து நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. இதேபோன்று மெகுல் சோக்ஷிக்கு எதிராகவும் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பதற்கான பணியை இந்தியா முடித்துவிட்டது, விரைவில் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மெகுல் சோக்ஷி அமெரிக்காவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இத்தகவல்களை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவிடம், இந்தியா உதவியை நாடியது. ஆனால் இன்டர்போல் அமைப்பின் அமெரிக்க பிரிவு மெகுல் சோக்ஷி அமெரிக்காவில் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மெகுல் சோக்ஷி எப்போது அமெரிக்காவைவிட்டு புறப்பட்டார், எந்த நாட்டிற்கு சென்றார் என்பது தெளிவாக தெரியவில்லை. இவ்விவகாரத்தை தொடர்ச்சியாக கையாளும் இந்தியா, இப்போது மெகுல் சோக்ஷி எங்குள்ளார் என்ற கேள்வியுடன் இன்டர்போலுக்கு கடிதம் எழுதியுள்ளது.