பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப், பயனர்களை கவர புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் விதமாக ‘After Reading’ எனப்படும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த வசதியின் மூலம், ஒரு மெசேஜ் படிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் தானாகவே அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெசேஜ் திறக்கப்படாமல் இருந்தால், அது 24 மணிநேரத்தில் தானாகவே அழிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் அப்டேட்களை வெளியிடும் ‘வாபீட்டா இன்போ’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் ஏற்கனவே ‘Disappearing Messages’ என்ற வசதி உள்ளது. இதன்படி, பயனர்கள் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பும் மெசேஜ்கள் 24 மணி, 7 நாள், 90 நாள் போன்ற கால அளவுகளில் தானாக மறைந்து விடும். ஆனால், அந்த வசதி முழு உரையாடலுக்கும் பொருந்தும்.
ஆனால் விரைவில் அறிமுகமாக உள்ள இந்த புதிய அப்டேட் மூலம், தனிப்பட்ட மெசேஜ்களை தேர்வு செய்து அனுப்ப முடியும் என்பதால் பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த அம்சம் குறுகிய நேர தனியுரிமை பாதுகாப்பை வழங்கும் என கூறப்படுகிறது.
பாஸ்வேர்டு, ஓடிபி போன்ற தகவல்களை பகிரும் போது இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயனர்கள் கருதுகின்றனர். எனினும், இந்த அப்டேட் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் ‘View Once’ என்ற வசதியும் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.