ஏஐ பயன்பாடு காரணமாக ஐடி உள்பட பல்வேறு துறைகளில் வேலையிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மனிதர்கள் பல மணி நேரம் செய்யக்கூடிய வேலையை ஏஐகள் சில நிமிடங்களில் செய்வதால், ஒயிட் காலர் வகை பணிகள் பலவற்றில் ஏஐ ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆரக்கிள், அமேசான் உலகின் டாப் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டன.
அந்த பட்டியலில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும் இணைந்துள்ளது. மே 20ஆம் தேதி முதல் தொடங்கும் முதல் கட்ட பணிநீக்கத்தில் உலக அளவில் உள்ள மெட்டா பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர். இதன் எண்ணிக்கை தோராயமாக 8,000 ஆக இருக்கும் எனத்தெரிகிறது. மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல நூறு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து வருகிறார்.
இந்த முதலீடு நிறுவனத்தின் செயல்பாட்டை முழுமையாக மாற்றி அமைக்கும் நோக்கில் செய்யப்பட்டு வருகிறது. ஏஐ உதவியால் பல பணிகளை தானியங்கி முறையில் செய்ய முடியும் என்பதால் பெரிய அளவிலான மனித ஊழியர்கள் தேவை குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நிறுவனம் சிறிய, திறமையான குழுக்களை மட்டும் வைத்துக்கொண்டு செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் பணி நீக்கம் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.