image courtesy: Grok AI 
உலக செய்திகள்

வாட்ஸ் அப்பில் கட்டண சேவையை கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டம்

விரைவில் வாட்ஸ் அப் பிளஸ் என்ற பிரீமியம் சேவையை கட்டண சேவையாக கொண்டு வர வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது.

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செயலியாக இருப்பது வாட்ஸ் அப். சந்தையில் போட்டியை சமாளிக்கவும், பயனர்களை கவரவும் புதுப்புது அப்டேட்களை வாட்ஸ் அப் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், விரைவில் வாட்ஸ் அப் பிளஸ் என்ற பிரீமியம் சேவையை கட்டண சேவையாக கொண்டு வர வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாட்ஸ் அப் பிளஸில், வழக்கமாக நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை விட பல மடங்கு கூடுதல் வசதிகள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது பயனர்கள் தங்கள் புரொபைலை தாங்களாகவே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். செயலியின் தோற்றம், முக்கிய வண்ணங்கள் மற்றும் செயலி ஐகானை மாற்றும் வசதிகள் ஆகியவை இடம் பெறும் என்று வாபிட்டா தெரிவித்துள்ளது.

அதேபோல், பிரீமியம் சந்தாதாரர்களுக்கு 'பின்' செய்யப்பட்ட சாட்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 20 ஆக உயரும். அத்துடன், நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு தனித்தனி ரிங்டோன்களை அமைக்கும் வசதியும் வழங்கப்படும். தற்போது இந்த புதிய வாட்ஸ் அப் பிளஸ் அறிமுகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.