மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் டிமஸ்கல்சின்கோ நகரில் உள்ள கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் கடந்த சனிக்கிழமை திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் இறுதியில் வாணவேடிக்கைக்காக மதவழிபாட்டு தலத்திற்கு அருகே பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மத வழிபாட்டு தலத்திற்கு அருகே சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் திருவிழாவுக்கு வந்திருந்த மத போதகர்கள், கிராம மக்கள் என 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த பட்டாசு வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.