காரகாஸ்
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளுக்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் குலுங்கின.
ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1 என்ற அளவிலும், பின்னர் 7.5 என்ற அளவிலும் இரு நிலநடுக்கங்கள் கடுமையாக தாக்கின. இதனால், தலைநகர் காரகாஸ் உள்பட பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 15 அடுக்குமாடிகளை கொண்ட கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. 67.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என ஐ.நா. மதிப்பிட்டு உள்ளது.
வெனிசுலாவின் முக்கிய சர்வதேச விமான நிலையம் பாதிப்படைந்து உள்ளது. கட்டிடங்கள் தரைமட்டமானதில், ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்தும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமலும் போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், லா குவைரா நகரில் சரிந்து கிடந்த கட்டிடத்தின் அருகில் தெரு ஒன்றில், டாக்டர் மரியா பெர்னான்டா தெரான் என்ற கர்ப்பிணி, பிரசவ வலியால் துடித்துள்ளார். இதன்பின்னர் அவர் தெருவிலேயே, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு அந்த பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, குழந்தை பிறக்க உதவி செய்தனர்.
அதன்பின்னர் குழந்தையை துணியால் மூடி அவரிடம் ஒப்படைத்தனர். என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் இது என பின்னர் சமூக ஊடகத்தில் தெரான் குறிப்பிட்டார். அவர்கள் இருவரும் மருத்துவ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இருவரும் உடல் நலத்துடன் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்த சூழலில், அந்த துயரத்திலும் கர்ப்பிணி ஒருவர் துணிச்சலுடன் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிசயம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.