பெய்ஜிங்,
பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். இந்நிலையில், இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என அவர் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேவை, விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் அவர் சீனா சென்றதுமே நேரடியாக, சீனாவின் ஒழுங்கு முறை அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டதாக ஹாங்காங்கில் இருந்து வெளி வரும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், என்ன நோக்கத்திற்காக அவரிடம் விசாரணை நடைபெறுகிறது, எந்த இடத்தில் விசாரணை நடைபெறுகிறது என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை.