உலக செய்திகள்

இந்தியாவுக்கு நம்ப முடியாத அடிப்படை கட்டமைப்பை பிரதமர் மோடி தந்துள்ளார் - அமெரிக்க நிதி நிறுவனர் புகழாரம்

இந்தியாவில் பிரதமர் மோடி செய்யும் நம்ப முடியாத பணிகளை அமெரிக்காவில் கொஞ்சமாவது செய்ய வேண்டும் என்று நிதி நிறுவனர் ஜேமி டைமன் கூறியுள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த பொருளாதார மன்ற மாநாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரும் நிதி நிறுவனரான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டைமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை மிகவும் பாராட்டினார். ஒரு கட்டத்தில் அவர் இந்தியாவில் பிரதமர் மோடி செய்யும் பணிகளை அமெரிக்காவிலும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று புகழாரம் சூட்டி பேசினார்.

இந்த விழாவில் அவர் மேலும் பேசும்போது, இந்தியாவுக்கு நம்ப முடியாத கல்வி முறையையும், அடிப்படை கட்டமைப்பையும் பிரதமர் மோடி தந்து இருக்கிறார். இது உண்மையிலேயே நம்ப முடியாத பணி. அதில் சிறிய அளவிலாவது நமது அமெரிக்காவில் செய்ய வேண்டும். 40 கோடி இந்தியர்களை பிரதமர் மோடி வறுமையில் இருந்து மீட்டெடுத்து இருக்கிறார். அவர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்து இருக்கிறார். இந்த பணிகளை எல்லாம் பிரதமர் மோடி எப்படி செய்தார் என்பது பற்றி நாம் விரிவாக பேசவேண்டும்.

பிரதமர் மோடியால், இந்தியாவில் 70 கோடி மக்கள் வங்கி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பண பரிவர்த்தனையை வங்கிகள் மூலம் மிக எளிதாக செய்கிறார்கள். மோடி என்ற மனிதரின் உறுதி காரணமாக ஓட்டுமொத்த தேசத்தை இந்தியர்கள் முன்னேற்றி இருக்கிறார்கள். பழமையான அதிகார வர்க்க நடைமுறைகளை பிரதமர் மோடி தகர்த்து எறிந்திருக்கிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களது கை ரேகை அல்லது கருவிழியால் (ஆதார்) அங்கீகரிக்கப்படுகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT