உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து முக்கிய நகரங்களை மீட்ட மியான்மர் ராணுவம்

மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 24 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நேபிடாவ்,

அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர், ராணுவம் ஆட்சியைத் தன்வசப்படுத்தியது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராடினர். ஆனால், அந்த போராட்டங்கள் ராணுவத்தால் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கோபமடைந்த பல்வேறு பழங்குடி இன ஆயுதப் படைகளும், ஜனநாயக ஆதரவாளர்களும் ஒருங்கிணைந்து ராணுவத்துக்கு எதிராக உள்நாட்டுப் போரில் குதித்தனர். சில ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த உள்நாட்டுப் போரினால் மியான்மரின் பெரும் பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன.

மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள சின் மாகாணத்தில் இந்திய எல்லைக்கு அருகே 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் 'டோன்சாங்'. இந்த நகரம் கடந்த 2024 முதல் சின் பழங்குடி இன கிளர்ச் சியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நகரை மீட்க மியான் மர் ராணுவம் கடந்த 10 நாட்களாக தீவிர தாக்குதலை நடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இதேபோல், மியான்மரின் தெற்குப் பகுதியில் உள்ள தானின்தாரி பிராந் தியத்தில், தாய்லாந்து உடனான வர்த்தகத்திற்குப் புகழ்பெற்ற 'மாவ்டாங்' எல்லை நகரைக் கைப்பற்ற ராணுவம் 2 வாரங்களாக போரிட்டது. யாங் கோன் நகரில் இருந்து 630 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரம். காரென் தேசிய யூனியன் மற்றும் உள்ளூர் கிளர்ச்சிக் குழுக்களின் பிடியில் இருந்தது.

மாவ்டாங் பகுதியில் இருதரப்பிற்கும் இடையே சுமார் 200 முறைக்கும் மேலாக கடுமையான துப்பாக்கி சண்டைகள் வெடித்தன. காடுகளிலும், மலைகளிலும் நடந்த இந்த தொடர் போரின் இறுதியில் இந்நகரையும் ராணுவம் மீட்டது. இந்த தொடர் தாக்குதலில் காரென் தேசிய யூனியன் அமைப்பைச் சேர்ந்த 24 கிளர்ச்சியாளர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட னர். அவர்களின் உடல்களும், பெருமளவிலான துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுத குவியல்களும் ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோதலில் ராணுவத் தரப்பிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சமாதான பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட புதிய கட்டாய ராணுவச் சேர்க்கை காரணமாக, மியான்மர் ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் கை தற்போது ஓங்கியுள்ளது. இந்த சூழலில், வன்முறையை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களுக்கு ராணுவ அரசு அழைப்பு விடுத்துள்ளது. இப்போதைய சூழ்நிலையில் அங்கு ராணுவக் கட்டுப்பாடு பலமாக உள்ளது.