ராவல்பிண்டி,
பாகிஸ்தானில் இந்துகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் சிறுபான்மையினராக உள்ளனர். அந்நாட்டு அரசு மதிப்பீட்டின்படி 75 லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் வசிக்கிறார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், இந்து சிறுமிகளை கடத்தி சென்று மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் கேரிசன் நகரில் புராண குயிலா என்ற பகுதியில் 100 ஆண்டு பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்தன.
இந்த நிலையில், திடீரென 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென கோவிலுக்குள் நுழைந்து வாசற்கதவு, மேல் பகுதியில் உள்ள மற்றொரு கதவு மற்றும் படிக்கட்டுகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோவிலின் முன் கடைகள் உள்ளிட்ட சில நீண்டகால ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் அறிந்து போலீசார் உதவியுடன் கடந்த 24ந்தேதி அவற்றை அகற்றினர்.
அதன்பின்னரே கோவிலை புனரமைக்கும் பணிகள் நடந்துள்ளன. தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்ததும் ராவல்பிண்டி போலீசார் அந்த பகுதிக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.