உலக செய்திகள்

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

ரோடு ஐலேண்ட்,

அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள்.

எனினும், இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலைமை சீராக உள்ளது. சம்பவம் பற்றி அறிந்து அந்த பகுதிக்கு சென்று, நிலைமையை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரவுன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அனைவரும் அந்த பகுதியை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது.

இதுபற்றி பிராவிடென்ஸ் துணை காவல் அதிகாரி டிம் ஓஹரா கூறும்போது, கருப்பு உடையில் வந்த ஆண் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கிறார் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் எப்படி பல்கலைக்கழகத்தின் உள்ளே நுழைந்துள்ளார் என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஹோப் ஸ்ட்ரீட் வழியே அவர் தப்பி சென்றுள்ளார் என உறுதியாக கூறினார்.

அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

SCROLL FOR NEXT