வாஷிங்டன்
வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா? இல்லையா? அப்படி இருந்தால் எங்கு வாழ்வார்கள்? என பல சந்தேகம் நம் அனைவருக்குமே இருக்கும். அடிக்கடி வேற்றுகிரகவாசிகளின் விமானத்தை பார்த்ததாக செய்திகளில் அடிபடுவதும் உண்டு. இந்நிலையில் ஏலியன்கள் வெள்ளி கிரகத்தின் அமில மேகங்களுக்கு நடுவே வாழக்கூடும் என அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.
கனத்த கரியமிலவாயு மேகங்களால் எப்போதும் மூடிக் கொண்டிருப்பதால் வெள்ளியின் கரும்பட்டைகளை கண்டறியும் ஆய்வின் போது, பூமியில் வாழும் பக்டீரியாக்களை போன்று ஒளியை உறிஞ்சும் தன்மை வெளிப்படுத்தின. அதாவது, இந்த பண்பு ஏரிகளிலும் குளங்களிலும் உள்ள பாசிகளை ஒத்திருந்தது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது.
வெள்ளி கிரகமானது பாதியளவு சல்பூரிக் அமிலத்தால் ஆனதுடன், தன் மீது விழும் 75 சதவிகித சூரிய கதிர்களை பிரதிபலிக்கக்கூடியது இதுதான். இந்த எளிமையான நுண்ணுயிர்கள் வாழ ஆதாரமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதேவேளை கடந்த வாரத்தில் விண்ணுயிரியல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள், வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட இவ்வகை நுண்ணுயிர்கள் குளிர்மேகக் காற்று வீசுவதன் மூலம் பரவி உயிர் வாழும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி கிரகம் தன்னைத் தானே 243 நாட்களில் சுற்றி கொள்கிறது ஆனால் சூரியனை 224.7 நாட்களிலேயே சுற்றி வருகிறது. அதாவது வெள்ளியில் ஒரு வருடத்தை விட ஒரு நாளின் கால அளவு அதிகம்.
வெள்ளியின் மேல்பரப்பு எப்போதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இதன் காற்றழுத்த மண்டலம் பூமியை விட 100 மடங்கு அதிகம்.