கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 29- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மார்ச் 24, 2.05
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது. போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தியும் வருகின்றன. எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து விட்டது. இதனால், ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுக்கவில்லை. நாங்கள் மேற்கொள்வது, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்தது.
தொடர்ந்து 26 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 1,400க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.
உக்ரைனும், தனியாளாக போரை எதிர்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் நேட்டோ நாடுகள் தங்களது படைகளை ரஷியாவுக்கு எதிராக களமிறக்கலாம் என கூறப்பட்டது. நேட்டோவில் உறுப்பினராக உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் மற்ற உறுப்பினர் நாடுகள் ஆதரவு கரம் நீட்டும். ஆனால், நேட்டோவில் உறுப்பினர் அல்லாத நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போரில் நேரடியாக களமிறங்கவில்லை. இதனால், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் நடந்துவரும் நான்கு வாரப் போரில் 7,000 முதல் 15,000 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக நேட்டோ நேற்று தெரிவித்தது. முன்னதாக ரஷியா ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15,000 ரஷிய வீரர்களை இழந்திருந்தது.
முன்னதாக சுமார் 1,300 உக்ரேனியப் படைவீரர்கள் ரஷிய ராணுவ தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார். மேலும் உக்ரைன் ஆறு ரஷிய ஜெனரல்களைக் கொன்றதாக கூறுகிறது. ஆனால் ஜெனரல் ஒருவர் இறந்துள்ளதாக ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.