காத்மாண்டு,
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 350-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (புதன்கிழமை) காலை போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 350-க்கும் மேற்பட்டோர் (28 போலீசார் உள்பட) மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் வெள்ளத்தால் சாலைகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.
தொடர்புகொள்ள முடியாதவர்களில் ரசுவாவில் (Rasuwa) உள்ள நேபாள காவல் துறை மற்றும் ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 26 பேரும், டிமுரே (Timure) மற்றும் மைலுங் (Mailung) பகுதிகளில் பணியில் இருந்த நேபாள ராணுவத்தை சேர்ந்த 44 பேரும் அடங்குவர். ரசுவாகதியிலுள்ள (Rasuwagadhi) சுங்கம் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் சிலரும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களும் கூட மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள நாட்டினர் உட்பட மொத்தம் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாகவோ அல்லது அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றோ தகவல் கிடைத்துள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்டப் பட்டியலில் 105 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தகவல்கள் சுற்றுலா முகமைகள், வழிகாட்டிகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்கள் தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு, +977 985 131 6807 மற்றும் +977 970 910 7500 ஆகிய அவசரக்கால எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தங்கள் 'எக்ஸ்' (X) வலை தளத்தில் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் காட்டாற்று வெள்ளம் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேபாளம் - சீனா எல்லையில் இன்று காலை 8 மணியளவில் 4.4 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நேபாளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.