காத்மாண்டு,
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 9 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கி தவித்த 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நாட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. திரிசூலி 3ஏ என்ற நீர்மின் திட்ட சுரங்கப் பாதைக்குள் தடிமனான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலையில் (வெள்ளிக்கிழமை) சுரங்கத்தின் உள்ளே இருந்து குரல்கள் கேட்டன. இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு, சுரங்கத்தின் உள்ளே 170 மீட்டர் ஆழத்தில் இருந்து மெக்கானிக்கல் போர்மேன் சஞ்சய் ஷா மற்றும் மேற்பார்வையாளர் கபீர் மகர்ஜன் ஆகிய 2 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்படனர்.
சுரங்கத்தின் உட்பகுதியில் காற்றோட்ட வசதி இருந்ததால், உணவு மற்றும் தண்ணீர் இன்றி ஒன்பது நாட்கள் அவர்களால் உயிர் பிழைக்க முடிந்துள்ளது. தற்போது அவர்கள் 2 பேரும் காத்மாண்டுவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
நேபாளத்தில் உள்ள 12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். அதில் 500-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றவர்களையும் மீட்கும் பணிகளில் ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன கருவிகள் மூலம் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.