காத்மாண்டு,
பிரதமர் பேரிடர் நிவாரண நிதியானது ரூ.217 கோடி யில் இருந்து ரூ.409 கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து குவிந்து வரும் இந்த நிதியை நிர்வகிப்பதற்கு நிதியமைச்சகத்தை பொறுப்பு அமைச்சகமாக அரசு அறிவித்து உள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, அந்த நாட்டை நிலைகுலைய செய்துள்ளது. மின்நிலையங்கள், நகரங்கள், கிராமங்கள், வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் என சுமார் 8 மாவட்டங்களில் எதையும் மிச்சம் வைக்காமல் வெள்ளம் முற்றிலும் அடித்து சென்று அழித்து விட்டது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களையும் 'பேரழிவு பிரதேசமாக' நேபாள அரசு அறிவித்துள்ளது. மேலும், சிதைந்து போன பகுதிகளை சீரமைக்க சர்வதேச நாடுகளின் உதவிகளையும் நாடியுள்ளது.
இதைத் தொடர்ந்து, நேபாள அரசின் 'பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு' பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் மழையாகக் குவிந்து வருகின்றன. குறிப்பாக, பேரழிவு சம்பவம் நடந்த 26-ந் தேதி மாலையில் இருந்தே உதவிகள் குவியத்தொடங்கின. அடுத்த நாள் நள்ளிரவு வரையிலான வெறும் 36 மணி நேரத்திலேயே ரூ.191 கோடி அளவுக்கு உதவிகள் கிடைத்து உலகை ஆச்சரியப்பட வைத்தன.
இதற்கிடையே, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.38.55 கோடி வசூலானது. இவ்வாறு வெள்ளம் பாதித்த 3 நாட்களிலேயே ரூ.200 கோடிக்கு மேல் நிதியுதவி கிடைத்துள்ளது. நிவாரண உதவி தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதியின் மொத்த இருப்பு ரூ.217 கோடியில் இருந்து தற்போது ரூ.409 கோடியாக மளமளவென உயர்ந்துள்ளது.
வெள்ளம்போல தொடர்ந்து குவிந்து வரும் இந்த நிவாரண நிதியை முறையாக நிர்வகிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் 'நிதியமைச்சகத்தை' பொறுப்பு அமைச்சகமாக நேபாள அரசு அறிவித்து உள்ளது.