உலக செய்திகள்

நேபாளம்: வீட்டை சூழ்ந்த வெள்ளம்; மரண பயத்தில் தவித்த குடும்பம் - திக் திக் நிமிடங்கள்... வைரலான வீடியோ

கார்கள், வாகனங்கள் அந்த வெள்ள நீரில் மிதந்தபடி 2-வது தளத்தில் நின்றிருந்தவர்களின் அருகே சென்று அச்சுறுத்தலை ஏற்படுத்தின.

காத்மாண்டு

நேபாளத்தில் வீடு ஒன்றை வெள்ளம் சூழ்ந்தபோது, அதில் வசித்த குடும்பம் பரிதவித்த காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்து உள்ளது. ஆயிரம் பேரை காணவில்லை. தொடர்ந்து மூன்றாவது நாளாக தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.

மரண பயம்

இந்த நிலையில், இந்த பெருவெள்ளம் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்தபோது, வீடு ஒன்றை வெள்ளம் சூழ்ந்து, அதில் வசித்தவர்களுக்கு மரண பயம் காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. வெள்ளம் கட்டுப்பாடின்றி பாய்ந்தபோது, பச்சை நிறத்தில் இருந்த வீடு ஒன்று தனியாக காட்சியளித்தது. அதன் 2-வது தளத்தில் வீட்டில் வசித்த குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி தஞ்சமடைந்திருந்தனர்.

வெள்ளம் நாலாபுறமும் சூழ்ந்து தரை தளம் நீரில் மூழ்கடிக்கப்பட்டது. அதனுடன் சேறும் சகதியும் சேர்ந்து கொண்டது. இதனால், அவர்களை மீட்பதும் சவாலானது. கார்கள், வாகனங்கள் அந்த வெள்ள நீரில் மிதந்தபடி 2-வது தளத்தில் நின்றிருந்தவர்களின் அருகே சென்று அச்சுறுத்தலை ஏற்படுத்தின.

வீடியோ வைரல்

இந்த காட்சிகளை சற்று தொலைவில் இருந்தபடி சிலர் வீடியோவாக படம் எடுத்துள்ளனர். அந்த வீட்டில் இருந்தவர்கள் பல மணிநேரம் வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி கொண்டனர். வீட்டின் வெளியே, சேறும் சகதியும் சுவடுகளை பதித்த நிலையில், அந்த வீடு எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் அசைந்து கொடுக்காமல் நின்றிருந்தது.

இதன்பின்னர் வெள்ளம் வடிந்ததும், மேல் தளத்திற்கு சென்ற அந்த குடும்பத்தினர் தங்களை காப்பாற்றும்படி துணியை சுழற்றி கூச்சலிட்டனர். இந்த காட்சிகளும் வைரலாகி உள்ளன. இதனால், அவர்கள் வெள்ளத்தின் பிடியில் இருந்து பாதுகாப்பாக தப்பி விட்டனர் என உறுதியாகி உள்ளது.