ஜெருசலேம்,
இந்தியா-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 25-ம் ஆண்டு நினைவாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் சென்று இறங்கிய மோடியை, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்துக்கே வந்து சிறப்பாக வரவேற்றார். இஸ்ரேலில் 3 நாள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரிசுகளை அளித்தார்.. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் யூதர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவு தாமிர தகடுகளை மோடி வழங்கினார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு பிரிவாக இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை பரிசாக அளித்தார்.
பெஞ்சமின் நேதன்யாகு தனது இல்லத்தில் பிரதமர் மோடிக்கு அளித்த தனிப்பட்ட விருந்தின் போது இந்த புகைப்படத்தை பரிசாக அளித்தார். பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.