காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கோஸ்ட் மாகாணத்தில் வான்வழி தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறும்பொழுது, சமீபத்தில் பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். இந்த தாக்குதலில் அந்த பெண், பிறந்த குழந்தை மற்றும் பெண்ணின் மற்றொரு குழந்தை, குழந்தையின் தந்தை மற்றும் ஒரு கிராமவாசி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறினார்.
இதனை கவர்னருக்கான செய்தி தொடர்பு அதிகாரி தலேப் மங்கள் உறுதிப்படுத்தி உள்ளார். வான்வழி தாக்குதலில் கார் ஒன்று இலக்காகி உள்ளது. எனினும், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.