அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து. இதையடுத்து, இருநாடுகளும் மீண்டும் முழு வீச்சில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா தற்போது தாக்குதலை நிறுத்தினாலும் சேதத்தில் இருந்து மீள ஈரானுக்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகும். நாங்கள் இன்னும் தாக்குதலை முடிக்கவில்லை; தற்போது வெளியேறவும் போவதில்லை" என்று டிரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் ராணுவ திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், அதன் ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நதான்ஸ் அணு மையம் அருகே மலைக்கடியில் அமைந்துள்ள "பிக்ஆக்ஸ் மலை" என்ற ரகசிய நிலத்தடி அணுசக்தி வளாகமும் அடுத்த இலக்காக இருக்கலாம். அந்தப் பகுதி மீது விரைவில் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும். பொதுவாக இலக்குகளை முன்கூட்டியே அறிவிக்க மாட்டேன். ஆனால் இதைத் தடுக்க அவர்களால் எதுவும் செய்ய முடியாது" என்றார். டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஈரானின் ராணுவ தலைமையகம், நிலத்தடி அணு வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது போரின் விரிவாக்கமாகக் கருதப்படும். அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, பஹ்ரைன் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து சைரன் ஒலிக்கப்பட்டதால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.குவைத் மற்றும் ஜோர்டானும் ஈரானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளன. குவைத் ராணுவம், தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் டிரோன் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.