மெக்கா
சவுதி அரேபியாவின் மெக்கா மீது ஏவுகணை, டிரோன் கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலால் மேற்காசிய பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் ராணுவ தளங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் உள்ளிட்ட நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட கூடும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மெக்காவின் தெற்கே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டும், டிரோன்களை கொண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால், மக்களிடையே பரவலாக அச்சம் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு சவுதி அரசு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டு கொண்டது.
எனினும், டிரோன்களையும், ஏவுகணைகளையும் சவுதி அரேபிய படையினர், நடு வழியிலேயே சுட்டு வீழ்த்தி விட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின்னர் சவுதி அரசு மக்களுக்கு விடுத்திருந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டது. மத்திய கிழக்கில் போர் துவங்கியது முதல் இதுவரை முதன்முறையாக மெக்கா நகரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
எனினும், மெக்காவை நாங்கள் குறி வைக்கவில்லை. மெக்கா நகர் மீது தாக்குதல் நடத்தவில்லை என ஹவுதி அமைப்பினர் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஹவுதி அமைப்பின் உறுப்பினரான ஹசீம் அல்-ஆசாத் கூறும்போது, மெக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுவது பழைய பொய். இதற்கு முன்பும் இதேபோன்று கூறப்பட்டது. யாரும் முட்டாள்கள் கிடையாது என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளரான யாஹியா சரீயும் சவுதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவை ஜோடிக்கப்பட்டவை என்றும் பொய்கள் என்றும் கூறினார். நாங்கள் சவுதி ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என தெரிவித்து உள்ளது.
சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில், மீண்டும் சவுதியின் மெக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரத்தில் சவுதியின் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அவை எரிந்து சேதமடைந்தன. இதில் 73 பேர் காயமடைந்தனர்.