Image Credits: AI 
உலக செய்திகள்

இனி ஒவ்வொரு சாட்டையும் திறக்க வேண்டாம்! வாட்ஸ்அப்பில் வரும் சூப்பர் அப்டேட்

'கான்டாக்ட் ஹப்' என்ற புதிய பகுதியை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன் யூசர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப் நிறுவனம் சந்தையில் போட்டியை சமாளிக்கவும் பயனர்களை தக்க வைக்கவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு: வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வர உள்ளது. தற்போது யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என் பதை தெரிந்துகொள்ள ஒவ்வொரு சாட்டையும் தனித்தனியாக திறக்க வேண்டியிருக்கும். ஆனால் இனி அதற்கான சிரமம் இருக்காது.

'கான்டாக்ட் ஹப்' என்ற புதிய பகுதியை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், ஆன்லைனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் இதர நபர்களை ஒரே இடத்தில் பார்க்க முடியும். அதிகம் தொடர்பில் இருக்கும் நபர்கள் மேல்பகுதியில் காட்டப்படுவார்கள். ஆன்லைனில் இருக்கும் நபர்களின் புரொபைல் புகைப்படத்தின் அருகில் பச்சை நிற புள்ளி தோன்றும்.

அதற்கு கீழே சமீபத்தில் ஆன்லைனில் இருந்தவர்களின் பட்டியலும் இடம் பெறும். இதனால் யார் தற்போது ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை சாட்களை திறக்காமல் உடனே தெரிந்துகொள்ள முடியும். நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது அலுவலக தொடர்புகளை விரைவாக கண்டுபிடித்து பேசுவதும் எளிதாகும். இதில் கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து புதிய இணைப்புகளை சேர்ப்பது போன்ற கூடுதல் வசதிகளும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த வசதி தற்போது சோதனை கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. பேஸ்புக் மெசேஞ்சரில் இதே மாதிரியான அம்சம் ஏற்கனவே உள்ளது. அதாவது, ஆன்லைனில் இருப்பவர்கள் பெயர்களுக்கு அருகில் கிரீன் குறியீடு இருக்கும்.