துருக்கி,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் துருக்கியில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை போரை முடிவுக்கு கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் துருக்கியில் ரஷியா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.