உலக செய்திகள்

விரிவாக்க கொள்கையில் அல்ல... வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறோம்: சீனா மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்

ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக்கை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜகர்த்தா

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவானது வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது என்று கூறினார்.

பிரதமர் மோடி இந்தோனேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அந்நாட்டுக்கு நேற்று சென்றடைந்த அவரை, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். அவருடைய இந்தோனேசிய பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு, கனிம வளம் உள்பட 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உயரிய விருது

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியா நாட்டின் உயரிய, பிந்தாங் அதிபூர்ணா ஆப் தி ரிபப்ளிக் ஆப் இந்தோனேசியா என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மோடி கூறும்போது, எனக்கு மிகுந்த அன்போடும், மரியாதையோடும் இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இவ்விருது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சொந்தமானது. இது இந்தோனேசிய மக்களின் உணர்வுகளையும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆழமான பிணைப்பையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் உரை

இந்தோனேசிய நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், பகிரப்பட்ட வளத்திற்காக 140 கோடி இந்தியர்களும், 29 கோடி இந்தோனேசிய குடிமக்களும் ஒன்றாக இணைந்து முன்னேற்றத்திற்காக செயல்பட்டது பற்றிய வரலாற்றை உலகம் பார்க்கும் என்று கூறினார்.

அவர் தொடர்ந்து, ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக்கை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம். இந்தோ-பசிபிக்கில் சுதந்திர இயக்கம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியாவானது விரிவாக்க கொள்கையில் அல்ல. வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ராணுவ வலிமை

தென்சீன கடல் மற்றும் அதனை கடந்துள்ள பகுதியில், சீனா தன்னுடைய ராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. சீனாவின் இந்த விரிவாக்க நடவடிக்கை, தென்கிழக்காசிய பகுதியில் உள்ள நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார். சீனாவின் இந்த நடவடிக்கையை நேரடியாக அல்லாமல் மறைமுக அடிப்படையில் சுட்டி காட்டிடும் வகையில் பிரதமர் மோடி சாடியுள்ளார்.