உலக செய்திகள்

’நவம்பர் 27' சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் நவம்பர் 27-ந் தேதி தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நியூயார்க்,

குழந்தை திருமணம், இளம் வயது திருமணம் மற்றும் கட்டாய திருமணத்தை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ந் தேதியை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் செப்டம்பர் 4-ந் தேதி இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சியாரா லியோன் கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 65-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

நவம்பர் 27-ந் தேதிக்கு இந்தியாவுடன் சிறப்பு தொடர்பு உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு இதே நாளில்தான் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ‘குழந்தை திருமணம் இல்லாத இந்தியா’ என்ற பிரசாரத்தை தொடங்கியது.இதனால், குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் நவம்பர் 27-ந் தேதி தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2030-ம் ஆண்டுக்குள் குழந்தை, இளம் வயது மற்றும் கட்டாய திருமணங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமணங்கள் குறைந்து வந்தாலும், நிலைமை இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 20.1 சதவீதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT