உலக செய்திகள்

ஐரோப்பாவின் முக்கிய நதி வறண்டதால் அணுமின் நிலையங்கள் மூடல்

சொகுசு கப்பல்கள் ஆங்காங்கே மணல் திட்டுகளில் சிக்கி தவிக்கின்றன.

புடாபெஸ்ட்,

மத்திய ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெயிலும், வறட்சியும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், ஐரோப்பாவின் முக்கிய வாழ்வாதாரமான டான்யூப் நதி முற்றிலும் வறண்டு, அதன் நீர்மட்டம் வெறும் 23 செ.மீ. ஆக சரிந்துள்ளது.

இதன் காரணமாக, சுற்றுலா மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. பல சொகுசு கப்பல்கள் ஆங்காங்கே மணல் திட்டுகளில் சிக்கி தவிக்கின்றன. நதியை நம்பியிருக்கும் ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் அணுமின் நிலையங்களை குளிர்விக்க தேவையான தண்ணீர் இல்லாததால், அணு உலைகள் அவசரமாக மூடப்பட்டு மின் உற்பத்தி முடங்கியுள்ளது.

மறுபுறம், வற்றிய நதிப்படுகையில் இருந்து 2-ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டுகளும், பழைய போர் கப்பல்களின் சிதைவுகளும் வெளியே தெரிந்தது. பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.