உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் இரவு நேரத்தில் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா - ஒருவர் படுகாயம்

ரஷிய படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கீவ்,

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. கீவ் நகரின் மீது சுமார் 5 முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக டார்னிட்ஸ்கி, சோலோமியான்ஸ்கி, போடில் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து கீவ் நகர மேயர் விடாலி கிலிட்ஸ்கோ கூறுகையில், ரஷிய படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக உக்ரைனின் பல பகுதிகளில் ரஷிய படைகள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த புதன்கிழமை கோஸ்டியாண்டினிவ்கா என்ற பகுதியில் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT