பிரிட்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நாட்டில் 600 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் தேசிய ஏர் டிராபிக் சேவைகள் அமைப்பு கூறுகையில், விமான போக்குவரத்து கணினி அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. பிரச்சினையை சரிசெய்ய என்ஜினியர்கள் அவசரமாக பணியாற்றி வருகிறார்கள் என்று கூறியிருந்தது.
சிறிது நேரத்தில் மற்றொரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பிரச்சினை சீர் செய்யப்பட்டுவிட்டது எனவும் விமான சேவைகள் சீராக தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ஏர் டிராபிக் அமைப்பில் ஏற்பட்ட இந்த தொழில் நுட்பக்கோளாறால் இங்கிலாந்துக்கு வருகை தரும் விமானங்கள் மற்றும் புறப்படும் விமானங்கள் என மொத்தம் 420 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஈசி ஜெட், கே.எல்.எம், லுப்தான்சா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமானங்கள் இதில் அடங்கும்.
லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளிலும் விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 15 விமான நிலையங்களில் பயணிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதாக தேசிய விமானப் போக்குவரத்து சேவை அமைப்பு தெரிவித்தாலும், ஏற்கனவே ஏற்பட்ட விமானத் தாமதங்கள் மற்றும் ரத்து நடவடிக்கைகளால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய பல மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.