உலக செய்திகள்

பாகிஸ்தான்: வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 4 பேர் பலி; 5 பேர் காயம்

நிறைய துப்பாக்கி குண்டுகளையும், காலி மதுபாட்டில்களையும் அந்த பகுதியில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெவ்வேறு இடங்களில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, மேமன் கோத் பகுதியருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ஆண்கள், ஒரு பெண் என தலையில் சுடப்பட்டு, பலத்த காயமடைந்து கிடந்தனர். அவர்களில் ஆண்கள் உயிரிழந்தனர். அந்த பெண் சூப்பர் நெடுஞ்சாலையில் தனியார் வீட்டு பகுதியருகே இருந்த புதரில் கண்டெடுக்கப்பட்டார்.

அடையாளம் தெரியாத 2 பேர் சுட்டு விட்டு தப்பினர் என அவர் தொடக்க கட்ட விசாரணையின்போது கூறியுள்ளார். அந்த பகுதியில் இருந்து நிறைய துப்பாக்கி குண்டுகளையும், காலி மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர். மற்றொரு சம்பவத்தில் வழக்கறிஞரான அதாவுல்லா ஜான் என்பவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர். இதுதவிர ஒருவர் துப்பாக்கி சூட்டில் பலியானார்.

ஸ்வாத் பகுதியில் நேற்று நடந்த மற்றொரு வன்முறை தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கான காரணம் என்னவென தெரிய வரவில்லை. போலீசார் அதுபற்றி விசாரித்து வருகின்றனர்.