காபூல்
ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மீது விமான படையை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பெர்மால் மற்றும் ஆர்குன் மாவட்டங்களின் மீது பாகிஸ்தான் விமானங்கள், வான்வழியே தாக்குதல் நடத்தி உள்ளன.
பக்திகா மாகாணத்தில் மதகுருமார்களுக்கான கல்வி நிலையம் மீதும் தாக்குதல் நடந்தது. இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தில் கோகியானி பாசோத் மற்றும் கானி கேல் மாவட்டங்களின் மீதும் பாகிஸ்தானிய ஜெட் விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தின.
இதனை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ஊடக தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இதுபற்றி பாகிஸ்தானின் தகவல் அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ரமலானின்போது சமீபத்தில் இஸ்லாமாபாத், பஜாவர் மற்றும் பன்னு நகரங்களில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, பித்னா அல் குவாரிஜ் மற்றும் அதன் கிளை அமைப்புகள், டேயிஷ் கோரசான் புரோவின்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் 7 முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் தாக்கி அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானிய நில பகுதி பயன்படுத்தப்படுகிறது என பாகிஸ்தான் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதனை நிறுத்தும்படியும் கூறி வருகிறது.