உலக செய்திகள்

பாகிஸ்தான் சரக்கு விமானம் மாயம்... கடலில் விழுந்ததா? - தேடும் பணி தீவிரம்

விமானத்தில் பயணித்த 5 பேரின் நிலை என்ன? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

லாகூர்,

பாகிஸ்தானின் கே2 ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 737-400 ரக சரக்கு விமானம் நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர்.

விமானம் மாயம்

ஓமன் வளைகுடாவை கடந்து அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது.

கராச்சியில் இருந்து 155 நாட்டிகல் மைல் தொலைவில் இரவு 9.22 மணியளவில் அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அரபிக்கடல்

விமான கட்டுப்பாட்டு அறை தரவுகளின்படி, 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் சுமார் 35,000 அடிக்கு மிக வேகமாக இறங்கிய விமானம், பின்னர் ரேடாரில் இருந்து முற்றிலும் மாயமானது. இதனால் விமானம் அரபிக்கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, மாயமான சரக்கு விமானத்தை தேடும் பணியில் பாகிஸ்தான் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விமானத்தில் பயணித்த 5 பேரின் நிலை என்ன? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.