பாட்னா
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்காசியாவில் காணப்படும் நீண்டகால மோதல் போக்கால், எரிபொருள் தட்டுப்பாடு பரவலாக அதிகரித்து காணப்படுகிறது.
ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதுடன், அதனை கடந்து செல்லும் எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்க கூடிய ஆபத்தும் காணப்படுகிறது. தவிர, ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்கவும் ஈரான் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதியான டாக்டர் அப்துல் மஜீத் ஹகீம் இலாஹி செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது, மேற்காசிய மோதலில் பாகிஸ்தானின் பங்கு பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் ஏற்படுவதில், பாகிஸ்தான் உதவி செய்வதற்கான சாத்தியம் பற்றி கேட்கப்பட்டதற்கு, அதில் உண்மையில்லை என அவர் கூறினார்.
ஏனெனில் எண்ணெய் விலை அதிகரிப்பை நிறுத்தவே அமெரிக்கா விரும்பியது. சில நாடுகளை பயன்படுத்தி கொள்ள அமெரிக்க அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் விரும்பினார்கள் என்று அவர் கூறினார்.
பீகாரின் பாட்னா நகரில் உள்ள சில சகோதரர்கள் அழைப்பின் பேரில், இந்நகருக்கு வந்தேன். அவர்களுடைய ஆதரவு, இரக்கம் மற்றும் இரங்கல்கள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கவே நான் வந்தேன் என்று அப்போது அவர் கூறினார்.