லாகூர்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆசியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியுள்ளது. மேலும், இந்த வழியாக கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கம் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்கத்தொடங்கியுள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல், எல்பிஜி கியாஸ் போன்றவற்றிற்கு கடும் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையை பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 321 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 335 ரூபாய்க்கு (அந்நாட்டு ரூபாய் மதிப்பில்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 16ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த 2 மாதங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு வழங்கும் எரிபொருள் சலுகை 50 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் தவிர எஞ்சிய அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.