இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு நடத்தியது.
இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் முரிட்கே பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தகர்க்கப்பட்டதை லஷ்கர்-இ-தொய்பா தளபதி காசிம் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் சேதமடைந்த கட்டிடம் முன்பு நின்று கொண்டு ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் தாக்குதலில் அழிக்கப்பட்ட முரிட்டோவில் உள்ள மர்கஸ் தைபாவின் இடிபாடுகளில் நான் நிற்கிறேன். அதை மீண்டும் கட்டும் பணி நடந்து வருகிறது. கடவுளின் அருளால் முன்பை விட இது பெரிதாக கட்டப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி செய்கிறது எனக் கூறப்படுகிறது.