கொழும்பு,
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த மோதல் உச்சத்தை எட்டிய நிலையில் கடந்த வாரம், விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராகவும் நியமித்தார்.
சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கையை கண்டித்து கொழும்பு நகரின் பல இடங்களில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சித் தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறிசேனாவின் உருவ பொம்மை ஊர்வலத்தில் சிலர் எடுத்து வந்து அதன் மீது கடுமையான தாக்குதலும் நடத்தினர். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16 ஆம் தேதி முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.
இதனால், இலங்கையில் அரசியல் நெருக்கடி முற்றியது. இலங்கையில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இதற்கு மத்தியில் இலங்கையில் போராட்டமும் வலுப்பெற்றது. இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு, அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சூழலில், இலங்கை நாடாளுமன்ற முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவித்துள்ளார். அதிபர் சிறிசேனா அறிவித்ததாக மகிந்த ராஜபக்சே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.