கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
போராட்டம் தீவிரமடைந்து வருவதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் உட்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம் ஆகியவற்றிற்கு முன்பாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் கானப்பட்டது. மேலும், இலங்கையில் நாளை அல்லது நாளை மறுநாளில் அரசியல் நகர்வுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.