உலக செய்திகள்

5-11 வயதினருக்கு பைசர் தடுப்பூசி - அமெரிக்க அரசு அனுமதி

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 2.8 கோடி சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு நபர் ஒருவருக்கு 10 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே தடுப்பு மருந்து அளிக்கப்பட உள்ளது.

இந்த அளவானது, பெரியவர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பு மருந்தில் 3-ல் ஒரு பங்கு ஆகும். ஏற்கனவே சீனா, சிலி, கியூபா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT