உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ்: பள்ளியில் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டு கொன்று மாணவன் தற்கொலை

உயர்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு 2 துப்பாக்கிகளை எடுத்து சென்றுள்ளான்.

மணிலா

பிலிப்பைன்ஸ் பள்ளியில் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே ஜம்போவாங்கா நகரில் உள்ள உயர்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு 2 துப்பாக்கிகளை எடுத்து சென்றுள்ளான்.

துப்பாக்கி சூடு

அப்போது எதிரே வந்த ஆசிரியரை நோக்கி திடீரென்று ஒரு துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். பின்னர், மற்றொரு மாணவரை நோக்கியும் சுட்டான். இதில், அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

இதன் பின்னர், துப்பாக்கியை கொண்டு வந்த மாணவன் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவத்தில் வேறு 2 பேரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாய்லாந்தில் சம்பவம்

இதுபற்றி நகர மேயர் கைமர் ஆடன் ஒலாசோ கூறும்போது, இந்த தாக்குதலை லைவாக காட்ட வேண்டும் என்பதற்காக அந்த மாணவன் உடலில் கேமரா பொருத்தியபடி வந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

தாய்லாந்தின் பாங்காக் புறநகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், 14 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய தாத்தா, பாட்டி, பள்ளி பணியாளர்கள் 5 பேர் மற்றும் 12 வயது சிறுமி என 8 பேரை சுட்டு படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குள் பிலிப்பைன்ஸ் பள்ளி ஒன்றில், சக மாணவனை துப்பாக்கியால் சுட்டு கொன்று மாணவன் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.