ஏடன்
தூத்துக்குடி நோக்கி வந்த கப்பலுக்குள் புகுந்த கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையை பார்த்ததும் தப்பி ஓடி விட்டனர்.
ஏடன் நாடு வழியே எம்.வி. கோல்டன் ஆர்சனெல் என்ற பெயருடைய, வெளிநாட்டு கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. தமிழகத்தின் தூத்துக்குடி நகர் நோக்கி வந்த அந்த கப்பலில் இந்திய நாட்டவர் ஒருவர் உள்பட 21 சிப்பந்திகள் இருந்தனர்.
அப்போது கப்பலுக்குள், கொள்ளையடிக்கும் நோக்கில் திடீரென கடற்கொள்ளையர்கள் புகுந்தனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கப்பலில் இருந்த சிப்பந்திகள் உடனடியாக பாதுகாப்பான அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அதனுடன், இந்திய கடற்படையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
கடற்கொள்ளையர்கள் கப்பலின் முக்கிய பகுதிகள் மற்றும் அறைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அப்போது, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். திரிகாந்த் கப்பலை சேர்ந்த வீரர்கள் அந்த சரக்கு கப்பலுக்குள் சென்றனர்.
அவர்கள் நிலைமையை ஆய்வு செய்தனர். சந்தேகத்திற்குரிய நபர்களை தேடினர். அவர்களை பார்த்ததும் கடற்கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கப்பலில் வேறு யாரும் இல்லை என உறுதி செய்த பின்னர், கப்பல் சிப்பந்திகள் அறையை விட்டு வெளியே வந்தனர்.
அவர்களும், வீரர்களுடன் சேர்ந்து கப்பலின் நிலைமையை ஆய்வு செய்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் ஒன்றும் வந்தது. வான்வழி கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், அரபிக்கடல் பகுதியில் கடற்கொள்ளை அதிகரித்துள்ளது.
இந்த பகுதியில், 2023-ம் ஆண்டு முதல் அதிகரித்து வரும் இதுபோன்ற 20 கடற்கொள்ளை முயற்சிகளை இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் முறியடித்துள்ளன.