உலக செய்திகள்

’இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் முன்வரவேண்டும்’ - பியூஷ் கோயல்

ஜப்பானில் அந்நாட்டு முன்னனி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் உயர்நிலைத் தலைவர்களுடன் இந்திய மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்தினார்.

டோக்கியோ,

இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆலோசனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு முன்னனி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் உயர்நிலைத் தலைவர்களுடன் இந்திய மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது, வர்த்தக நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

7.7 சதவீத வளர்ச்சி

அப்போது பேசிய பியூஷ் கோயல், ‘இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஜப்பானின் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும். உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு இடையே கடந்த ஆண்டு இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. வரும் 2047-ம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார நாடாக உருவெடுக்கும் வகையில் இந்தியா முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவில் உள்ள வங்கிகளின் வலுவான முதலீடுகள், வாராக்கடன் அளவு குறைவாக இருத்தல் ஆகியவை நடுத்தர மக்களின் வங்கிப் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செலவினங்களுக்கேற்ப வருவாய் ஆகியவை நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது’ என்று கூறினார்.